Showing posts with label திரை விமரிசனம். Show all posts
Showing posts with label திரை விமரிசனம். Show all posts

Sunday, June 27, 2010

சிங்கம் = தினத்தந்தி

கொட்டை எழுத்தில், அதிரடியாக தலைப்பு செய்திபோல் ஆரம்பித்து, நம் எதிர்பார்ப்புக்கு கொஞ்சமும் மாற்றமில்லாமல் சரியான நேரத்தில் பாட்டு, சரியான நேரத்தில் சண்டை, சரியான நேரத்தில் காதல், கலகலப்பு (அவ்வப்போது விவேக்கின் கடிப்பு) என்று மூன்று மணி நேரத்தில் நமக்கு என்ன தேவையோ அதை சரியான விகிதத்தில் கொடுத்திருக்கிறார்கள். மொத்தத்தில் தினத்தந்தி பேப்பர் படித்த திருப்தி நமக்கு கிடைத்து விடுகிறது. மற்றபடி பட விமரிசனமெல்லாம் தேவையில்லை.
சிங்கம் = தினத்தந்தி



Thursday, September 10, 2009

நினைத்தாலே இனிக்கும் - விமர்சனம்



ஆறேகால் மணி காட்சிக்கு ஐந்தரை மணிக்கு அவசரம் அவசரமாக போய் சேர்ந்தேன். தியேட்டர் வாசலில் இரண்டு பேர் வெளிப்புறத்தை ரொம்ப கவலையாக பார்த்துக் கொண்டிருக்கவே யார் என்று உற்று பார்த்தேன். வேறு யாருமில்லை, அவர்கள்தான் தியேட்டர் முதலாளியும், மேனேஜரும். சற்றே உள்ளே நுழைந்து எட்டி பார்த்தேன். யாரோ இரண்டு பேர் தியேட்டர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை போட்டோ எடுத்து கொண்டிருந்தார்கள். "திரைக்கு வந்து சில நாட்களே ஆன " படத்துக்கு ஏற்பட்ட நிலைதான். எங்கள் ஊரில் இதெல்லாம் சகஜம். சரி விஷயத்துக்கு வருகிறேன். ஒரு வழியாக நாற்பது, ஐம்பது பேர் தேற, படத்தை திரையிட்டார்கள்.

பிரிதிவிராஜ், ஒரு ஐ.டி கம்பெனியின் சி.ஈ.ஓ கணக்காக பிசினெஸ் க்ளாசில் பிளைட்டில் வருகிறார். அருகில் அமர்ந்து வந்தவர் சும்மா இல்லாமல் இவரிடம் அளவளாவ உடனே பிளாஷ் பேக்கிற்கு போகிறது கதை. மீண்டும், மீண்டும், மீண்டும், ஒரு காலேஜ் கதை. காலேஜில் படிப்பைத்தவிர மற்ற எல்லா விஷயங்களும் நடக்கிறது. பிரிதிவிராஜ் டான்ஸ் ஆடுகிறார், சண்டை போடுகிறார், நரம்பு புடைக்க வீர வசனங்கள் பேசுகிறார், வழக்கம் போல எதிரிகளை சம்பாதித்து கொள்கிறார். எம்.எல்.ஏ மகளாக பிரியா மணி ஆண் குரலில் வீராப்பு பேசுகிறார். பின்னர் பிரிதிவிராஜ் எப்போதோ பொறுக்கி எடுத்த தன் போட்டோவை பார்த்ததும் காதல் கொள்கிறார். இதற்கிடையில் இரண்டு பாடல்கள், மூன்று சண்டைகள், காமடி என்ற பெயரில் லொள்ளு சபா ஜீவா சொதப்பல்கள். வேஸ்ட் செய்திருக்கிறார்கள். வழக்கம் போல் காலேஜுக்குள்ளே இரண்டு குரூப். மாறி, மாறி ஒருவர் காலை ஒருவர் வாரி விடுவார்கள். இரண்டு குரூப்புக்கு நடுவில் பீ. வாசுவின் மகன் சக்தி, திடீரென்று சமரச முயற்சி செய்து தோற்கிறார். காலேஜ் எலக்ஷன் நடத்த முடிவு செய்யப்பட, ப்ரிதிவிராஜை எதிர்த்து பிரியாமணியை நிறுத்துகிறது எதிர் கும்பல். உடனே ப்ரிதிவிராஜுக்கு கோபம் வரவே காதல், மோதலில் முடிகிறது. மோதல் முத்தி கலவரம் ஏற்படுகிறது. இதற்கு இடையில் திடீரென்று சக்தி இறந்து கிடக்கிறார். சக்தியின் அப்பாவாக வரும் பாக்கியராஜ் குமுறி அழுகிறார். (பாக்கியராஜ் கையை உருட்டி, உருட்டி பேசும்போதெல்லாம் லொள்ளு சபாவில் ஜீவா செய்யும் மிமிகிரிதான் ஞாபகம் வருகிறது. இது ஜீவாவின் வெற்றி.)

சக்தியின் எட்டாவது (அது என்ன எட்டாவது?) நினைவு நாளை கொண்டாட மீண்டும் நண்பர்கள் காலேஜில் ஒன்று சேர்கிறார்கள். இந்த விழவிற்குதான் எலக்ஷன் போதே காணாமல் போன (படிப்பை பாதியிலேயே கை விட்ட) பிருதிவிராஜ் பிளைட்டில் வந்து சேருகிறார். என்னதான் 'இண்டிகோ' ஏர்லயன்ஸ் 'சீப்' பான பிளைட் விட்டிருக்கிறது என்பதற்காக இப்படியா?

விழா முடிந்தவுடன் யாரோ பிரிதிவிராஜை கொலை செய்ய முயற்சி செய்ய திடீரென்று கதை நம்ம ரமணன் சொல்லும் வானிலை அறிக்கை போல திசை மாறுகிறது. வில்லன் யார் என்று நாம் குழம்பும்போது சற்றும் சம்பந்தம் இல்லாமல் 'புர்க்கா' அணிந்த உடன் படித்த தோழியை காட்டுகிறார்கள். அவர் ஒரு புதிய கதை ஒன்றை விட்டு சக்தியுடன் அழகான பாடல் ஒன்றை பாடுகிறார். பிறகு தான் பிரிதிவிராஜை கொலை செய்ய முயன்றதன் காரணத்தை விளக்குகிறார். அதன்படி ப்ரிதிவிராஜ்தான் சக்தியை கொலை செய்தார் என்று புது கதை விடுகிறார். "ஐயோ" "தலை சுத்துதே" என்று நீங்கள் ஓடுவது தெரிகிறது.

எனக்கு ஒரு சந்தேகம், இந்த கதையை டைரக்டர் எப்படி ப்ரோடுசருக்கு புரிய வைத்தாரோ, எனக்கு புரிய வில்லை.

ஒரு சந்தோஷமான விஷயம். காலேஜில் ஒரே ஒரு காட்சியில் H2O

என்று பாட சம்பந்தமாக எழுதுகிறார் மனோபாலா.

பழைய 'நினைத்தாலே இனிக்கும்' படத்தை நம்பி இதை பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.